Sunday, February 28, 2010

கற்பழிப்பு அது உங்களின் தவறு அல்ல !!! - பகுதி 2


கற்பழிப்பு என்பது ....

  • கற்பழிப்பு சம்பவங்கள் வாலிபப் பருவ பெண்களிடத்தில் தான்நடைபெறுகின்றன என சொல்லமுடியாது. ஏனெனில் வயது கடந்தபெண்களிடத்திலும் கூட இந்த கற்பழிப்புசம்பவங்கள் நடந்திருக்கின்றன.
  • கற்பழிப்பு இரவு நேரங்களிலும், தனிமையான, மறைப்புறமான இடங்களில் தான் நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. கற்பழிப்பு எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கூட நிகழலாம். பாதுபாப்பான இடங்களான வீடு, பள்ளிக்கூடம், வேலை இடம் என கற்பழிப்பு எவ்விடத்திலும் நடக்கலாம். கற்பழிப்பிற்கு நேரம், இடம் என ஒரு வரையறை இல்லை.
ஒரு வேளை நீங்கள் கற்பழிக்கப்பட்டிருந்தால் .........
  • உங்களது உடலை சுத்தம் செய்யாதீர்கள் / உடைகளை மாற்றாதீர்கள்.
உங்கள் முதல் கட்ட நடவடிக்கை உங்களை சுத்தம் செய்வதாய் தான் இருக்கும். ஆனால், அதைக் காட்டிலும் முக்கியம் என்னவென்றால் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதே. இரத்தக்கறைகள், விந்துகள், நூல், தலை முடி போன்றவை யாவும் கற்பழிப்பை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்களாகும்
  • ஒரு நண்பரிடம் சொல்லுங்கள்
உங்களை மருத்துவமனைக்கும், காவல் நிலையத்திற்கும் அழைத்து செல்லுமாறு அந்த நண்பரைக் கேளுங்கள். நடந்த சம்பவத்தை நினைவுக் கூறும் போதும், அவற்றை விவரிக்கும் போதும் ஒரு வித மன உளைச்சலுக்கு உள்ளாகவும் நேரிடும்.

  • உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
மருத்துவமனை ஊழியர்கள் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் முறையிடக்கூடும். சில சமயங்களில் காவல் துறையினரின் குற்ற அறிக்கைகள் மருத்துவமனைகளிலும் பதிவு செய்யப்படலாம் அல்லது நீங்கள் நேரடியாகவே காவல் நிலையத்திற்கு செல்லலாம். பின்னர் நீங்கள் மருத்துவமனைக்கு போகும் போது, ஒரு பெண் காவல் அதிகாரி உங்களுடன் துணைக்கு வருவார்.

மருத்துவமனையில் ....

உங்களை மருத்துவர்கள் பரிசோதிப்பதற்கு முன்னதாக, ஒரு அனுமதி படிவம் உங்களிடம் கொடுக்கப்படும். கிடைக்கப் பெற்ற விபரங்கள் காவல் துறையினரின் புலன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும். மருத்துவர் உங்களின் அந்தரங்க இடங்களைப் பரிசோதிப்பார். உங்களது ஆடைகளும் சோதனைக்கு உட்படும்.

காவல் துறையினரின் புலன் விசாரணை ..

காவல் துறையினரின் முதல் கற்பழிப்பு முறையீட்டுக்குப் பின், ஒரு பெண் காவல் அதிகாரி ( புலன் விசாரணைப் பிரிவு ) உங்களது சம்பவத்தை விசாரிப்பார். எல்லா விபரங்களும் சேகரிக்கப்படும். நீங்கள் சில வேளைகளில் குற்றவாளியை அடையாளங்காண காவல் நிலையத்திற்கு அழைக்கப்படலாம்.

காவல் துறையினரின் புலன் விசாரணைக்குப் பிறகு ...

அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர் ஒருவர் உங்கள முறையீட்டை விசாரிப்பர். கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும். ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் அவரால் எந்ததொரு குற்றச்சாட்டையும் வெளியிட முடியாது.


நீதிமன்றத்தில்..

நீங்கள் முறையீடு செய்தவராகையால் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களோடு சாட்சிக் கொடுக்க அழைக்கபடுவீர்கள். உங்களுக்கு ஒரு வழக்குரைஞர் தேவைப்பட மாட்டார். ஆனாலும் வழக்கிற்கு முன்னும், வழக்கு நடந்துக் கொண்டிருக்கும் போதும் உங்களது சாட்சிக்குஉறுதுணையாக ஒரு வழக்குரைஞர் ஏற்படுத்தப்படுவார். நீங்கள் கற்பழிப்பு குறித்தான ஆதாரங்களை வெளியிடும் போது, ஒரு வேளை நிதிமன்ற அவையிலுள்ள பொதுமக்களை வெளியேற்றக் கூடும்.

கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனைகள் :

பேனல் கோர்ட், செகஷன் 376- படி கற்பழிப்பு பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறைந்த பட்ச தண்டனையாக ஐந்து வருடங்களுக்கு குறையாமலும், கூடுதல் பட்சமாக இருபது வருடங்களுக்கு மேற்போகாமலும் மற்றும் சவுக்கடிகளையும் பெறுவார்.

குறிப்பு :
  • மலேசியர்களின் திருமணம் நடந்து முடிந்த பிறகு இல்லற வாழ்க்கையில் கற்பழிப்பு சம்பவம் நடந்தால் நடவடிக்கை எடுக்க மலேசிய சட்டத்திட்டத்தில் அரசாங்கம் அமுலாக்கவில்லை.
  • நீங்கள் கற்பழிக்கப்பட்டிருப்பின் கோபம், வேதனை, கலக்கம், குழப்பம், குற்றவுணர்வு, வெட்கம் போன்றவற்றால் ஆட்கொள்ளப்பட்டிருப்பீர்கள். தனித்தும், மற்றவர்கள் இடத்தே சேராமலும் இருப்பீர்கள். இவை வழக்கமாக ஏற்படக் கூடியவை.
  • நினைவில் கொள்ளுங்கள் ! கற்பழிப்பு உங்களுக்கெதிரான ஒரு குற்றம். அது உங்களின் தவறு அல்ல. உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, உங்களுக்கு வழிகாட்ட ஒரு நம்பிக்கையானவரைத் தேடுங்கள் அல்லது பெண்கள் உதவி / மறுமலர்ச்சி நிலையத்தின் உதவியை நாடுங்கள்.
தகவல் : பெண்கள் மறுமலர்ச்சி நிலையம், பினாங்கு